செய்யூர் காவல் நிலையத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற பெண்கள் உட்பட 250 விடுதலை சிறுத்தைகளை போலீசார் கைது செய்தனர். லத்தூர் ஒன்றியம் ஆக்கினாம்பட்டு ஊராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி செய்யூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக விடுதலை சிறுத்தைகள் அறிவித்தனர். அதன்படி, செய்யூர் தாலுகா அலுவலகம் அருகில் இருந்து நேற்று காலை ஊர்வலம் புறப்பட்டது. மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் தொடங்கி வைத்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று கோஷமிட்டபடி போலீஸ் நிலையம் நோக்கி சென்றனர்.
இவர்களை பஜார் வீதியில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
காஞ்சி மாவட்ட செயலாளர் விடுதலை செழியன், மாவட்ட துணை செயலாளர் சிறுத்தை கிட்டு, மாவட்ட செய்தி தொடர்பாளர் எழிலரசு, பொன்னிவளவன், மணிமாறன், இலக்கியன் மற்றும் 50 பெண்கள் உட்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.