தமிழீழ விடுதலை அரசியலை அறவழியில் முன்னெடுத்துச் செல்ல "கரும்புலி முத்துக்குமார் பாசறை'' தொடக்கம்- தொல். திருமாவளவன் அறிவிப்பு
ஈழத் தமிழினத்தை இனவெறியர்கள் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி ஓராண்டை எட்டிவிட்டது. மே 18, அந்தப் பேரவலத்தின் நினைவு நாளாக உலமெங்கும் தமிழர்களால் ஆறாத் துயரத்துடன் நினைவுகூரப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கிறோம் என்னும் பெயரில் அப்பாவிப் பொதுமக்களை சிங்கள இராணுவம் மனிதநேயமற்ற முறையில் கொன்று குவித்ததை உலகமே வேடிக்கை பார்த்தது. இன்னும் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள இராணுவக் கெடுபிடிகளுக்குள் சிக்கி வதைமுகாம்களுக்குள் அல்லல்பட்டு வருகின்றனர். ஒட்டுமொத்த ஈழத் தேசத்திலும் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புகளும் அடக்குமுறைகளும் பட்டவர்த்தனமாக தலைவிரித்தாடுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அப்பாவித் தமிழ்மக்கள் அச்சத்தோடும் பீதியோடும் ஒவ்வொரு நாளையும் கழித்து வருகின்றனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் தாளமுடியாத வேதனையிலும் தாயகத்திற்கு இனி திரும்ப முடியாது என்ற கவலையிலும் ஆழ்ந்து உழலுகின்றனர். சிங்கள இனவெறியர்களுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உற்ற துணையாய் இருந்து மேலும் மேலும் அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றன.
இத்தகைய சூழலில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதும் ஈழத் தமிழர்களுக்கான ஒரு நிலையான அரசியல் தீர்வை வென்றெடுப்பதும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்களின் முன்னால் உள்ள பெரும் சவாலாக அமைந்துள்ளது.
மே 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இந்த நினைவு நாளில் தமிழீழ மக்களுக்குத் தொடர்ந்து துணை நிற்போம்! தமிழீழ விடுதலை அரசியலை அடைகாப்போம்! என இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம். இத்தகைய உறுதியை ஏற்கும் வகையில் ஈழ விடுதலைக்காகத் தன் உயிரைக் கொடையளித்த தம்பி முத்துக்குமார் பெயரில் பாசறை ஒன்றை தலைநகர் சென்னையில் தொடங்குகிறோம். அறவழியில் தமிழீழ விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்துச்செல்லும் ஒரு களமாக இந்த "கரும்புலி முத்துக்குமார் பாசறை' அமையும்.
இவண்
(தொல். திருமாவளவன்)