Sporty Magazine official website | Members area : Register | Sign in

உழைக்கும் மகளிர் உரிமை மாநாடு !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
பெண்களுக்கான இடஒதுக்கீடு அரசியல், கல்வி, வேலை வாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள,; தனியார் நிறுவனங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் - எழுச்சித்தமிழர்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைநிலை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் 08.03.10 மகளிர் தினத்தில் நெல்லையில் ”உழைக்கும் மகளிர் மாநாடு” நடைப்பெற்றது. நெல்லையில் சவகர் அரங்கத்தில் கூட்டப்பட்டிருந்த இம்மாநாட்டுக்கு ஏராளமான மகளிர் திரண்டிருந்தனர். நெல்லை நகரே நெரிசலில் திக்கி திணறியது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் பங்கு கொண்ட மாநாட்டுக்கு மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் நற்சோனை அவர்கள் தலைமை தாங்கினார்.




பெண்களுக்கான விடுதலைக் கருத்தியலை முன்னெடுக்கும் விதத்தில் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக பிடாரி என்கிற காலாண்டிதழ் வெளியிடப்பட்டது. நிறுவனர் மற்றும் ஆசிரியர் தொல்.திருமாவளவன் அவர்கள். கவுதம சன்னா மற்றும் பூவிழியான் ஓருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். அன்னை மீனாம்பாள் அவர்களால் 1937-ல் ஆதிதிராவிடர் மாநாடு நெல்லையில் நடைப்பெற்றது. அப்பொழுது வெளியடப்பட்ட மீனாம்பாள் என்கிற சிறு புத்தகம் கவுதம சன்னா அவர்களால் வெளி கொணரப்பட்டது.

கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் மகளிர் விடுதலை இயக்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.அதற்கு முன் கீழ்காணும் தீர்மானங்களை நிறைவேற்றினார்.

நெல்லைச் சீமையில் நடைபெற்ற உழைக்கும் மகளிர் உரிமை மாநாட்டின் தீர்மானங்கள்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைநிலை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில், உலக பெண்கள் தினத்தையொட்டி நெல்லைச் சீமையில் 08.03.2010 அன்று நடைபெற்ற உழைக்கும் மக்களின் உரிமை மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டன.

வீரவணக்கம்.
1. பெண்கள் உரிமைக்காக தம் வாழ்நாள் முழுவதும் போராடியப் பெண்களுக்கு வாக்குரிமை, வேலை உரிமை, பேறுகால உதவிகள், சொத்துரிமை, தத்தெடுக்கும் உரிமை சேர்ந்தும் வாழும் உரிமை, மற்றும் மண விலக்கு உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை மீட்டெடுத்த புரட்சியாளர் அம்பேத்கர், பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிய தந்தை பெரியார், மாவீரன் ரெட்டமலை சீனிவாசன் துணைவியார் ரெங்க நாயகியம்மாள், தந்தை சிவராஜ் அவர்களின் துணைவியார் அன்னை மீனாம்பாள், மூவலூர் மூதாட்டி இராமாமி;ர்தம் அம்மையார், ஈ.வெ.ரா.மணியம்மை உள்ளிட்ட பேராளிகளுக்கு வீர வணக்கத்தை செலுத்துகிறது இம்மாநாடு. அத்துடன் ஈழத்தில் களப்பலியான தமிழ் மக்களுக்கும், போராளிகளுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கத்தை செலுத்துகிறது.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா
2. பெண்களுக்கான இடஒதுக்கீடு அரசியல், கல்வி, வேலை வாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள,; தனியார் நிறுவனங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்ழனை அளிக்க வேண்டும் என இம்மாடு கேட்டுக் கொள்கிறதுஃ
இந்திய கூட்டரசின் நாடாளுமன்ற மாநிலங்களவையில் 08.03.2010 அன்று தாக்கல் செய்யப்படும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை இம்மாநாடு வரவேற்கிறது. எந்த ஒரு காரணத்தையும் முன்னிறுத்தி மசோதாவை மேலும் தள்ளிப்போடாமல், தாமதப்படுத்தாமல் உடனே அது நிறைவேற்பப்படவேண்டும். அதே நேரத்தில் அம்மசோதவில் தலித், பழங்குடியினர் மற்றும் இதரப்பிற்பட்டோருக்கான விகிதாச்சாரத்தை பின்னாளில் அளிப்பதற்கு இந்திய அரசு உறுதியளிக்க வேண்டும் என இம்மாநாடு இந்திய கூட்டரசை வற்புறுத்துகிறது. மேலும், உள் ஒதுக்கீடு கோரிக்கை என்பது உழைக்கும் மகளிருக்கான உரிமையே ஆகும். பொதுவான இடஒதுக்கீட்டில் சுரண்டும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே பயன்பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் வழக்கம்போல் புறக்கணிக்கப்படும் நிலைத்தொடரும். ஆகவே, உள் ஒதுக்கீடு கோரிக்கை தவிர்க்க முடியாதது எனவே, அதை அடைய தொடர்நடவடிக்கையினை ஒரு உத்தியாக கையாளவேண்டியது இப்போதைய கடமை என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

பெண்களுக்கு தனி அமைச்சகம்
3. விடுதலை பெற்ற இந்திய நாட்டில் பெண்கள் புறக்கணிப்படும் நிலை தொடர்கிறது. இந்நிலைய மாற்றிட இந்திய கூட்டரசிலும், மாநில அரசுகளிலும் பெண்களுக்கான தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலிறுத்துகிறது.

பெண்களுக்கு தனி வரசு செலவு திட்ட அறிக்கை
4. இந்திய கூட்டரசு மற்றும் மாநில அரசுகளில் தாக்கல் செய்யப்படும் வரவு செலவு திட்டத்தை புதிய சிந்தனைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து பெண்களுக்கான தன நிதி நிலை (வரவு செலவு அறிக்கை) முறையை கொண்டுவர வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

அரசியல் தலையீடு இல்லாத பெண்கள் ஆணையம்
5. பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள மகளிர் ஆணையத்தின் தலைவராக, உறுப்பினர்களாக பெண்ணுரிமை பெண் விடுதலைக் குறித்து பரந்த அனுபவம் உள்ளவர்களை அமர்த்துவதுடன், அதில் அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி இந்திய கூட்டரசு மற்றும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம்

6. குடும்ப பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம், முறையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உள்ளது. எனவே, இது குறித்து மாநில அரசு சிறப்புக ;கவனம் செலுத்தி அச்சட்டத்தை வலுவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

வீட்டுவேலை மற்றும் கொத்தடிமை பெண்களின் நலம்
7. வீட்டுவேலை செய்யும் பெண்கள், கொத்தடிமைகளாக வேலை செய்யும் பெண்கள் ஆகியோர் குழந்தைகளானாலும், பெண்களானாலும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதுடன், கடுமையான பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஆளாகின்றனர். இத்தகைய கொடுமைகளிலிருந்து இவர்களை மீட்டுப்பாதுகாத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அவர்கள் மாற்றுத் தொழில்களைத் தேர்வு செய்து மேம்பட உதவ வேண்டுமெனவும், இந்த மாநாடு தமிழக அரசைக் கேட்டுகொள்கிறது.

நாடோடிகளாக அலையும் தொழிலாளர்களின் நலன்
8. தமிழகத்தில் சாலை கட்டுமானங்களிலும், கட்டிடக் கட்டுமானங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்கள் நாடோடிகளுக்கான வாழ்நிலையிலேயே இருக்கின்றனர். இதில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லை. எனவே அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், அவர்களது பிள்ளைகளின் கல்வியையும உறுதி செய்ய வேண்டுமென இம்மாநாடு வற்புறுத்துகிறது.

சுயஉதவிக் குழுக்களின் கடன் ரத்து
9. நம் மாநிலத்தில் சுயஉதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டாலும், பெரும்பாலான பெண்கள் போதிய பயிற்சியின்றி சுய உதவிக் குழுக்களின் மூலம் சுய தொழில்களில் ஈடுபடுவதால் அவர்களுக்கு கடன் சுமை ஏறிக்கொண்டு வருகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை முழுவதுமாக ரத்து செய்து உதவும்படி இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

நிலங்களை வழங்குவதில் முன்னுரிமை
10. நாடு முழுவதும் தரிசு நிலங்களையும், வனத்துறையில் பயன்பாடின்றி இருக்கும் நிலங்களையும் கண்டறிந்து அவற்றை தொகுத்து ஏழை மக்களுக்கு பிரித்தளிக்க வேண்டும். அதில் அந்தந்த கிராமங்களில் வாழும் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், தனித்து வாழும் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதிலும் இவர்களுக்கு முன்னுரிமை வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை வற்புறுத்துகிறது.

பெண்களின் கல்விக்கு மாத உதவித்தொகை
11. பெண்களின் கல்வி நகர்புறங்களில் மேம்பாட்டிருந்தாலும், கிராமபுறங்களிலும், மலைக்காடுகளிலும் உள்ள பெண்கள் பள்ளிக ;கல்வியில் இடையில் நிற்பது அதிகரித்துள்ளது. விவசாய முறைகளில் உருவான மாற்றங்கள், வருமானக்குறைவு ஆகியன இதற்கு காரணம் என்பதால் 5 முதல் 12 ஆம் வகுப்புவரை கிராமப்புறப் பெண்களின் கல்விக்கு மாத உதவித்தொகையை வழங்க வேண்டுமென இம்மாநாடு வலிறுத்துகிறது.

பெண்களின் பிறப்பு விகிதம் அதிகரிப்பது குறித்து
12. பெண்களின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால் இதை தடுத்து நிறுத்தவும், பெண்களின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் செய்வதற்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஊட்டச்சத்து குறைவான பெண்கள் தமிழகத்தில் அதிகம் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, பெண் குழந்தைகளை வலிமை உள்ளவர்களாக ஆக்குவதற்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டத்தை வகுக்கும்படி தமிழக அரசை இம்மாநாடு கோருகிறது.

கட்டாய திருமண பதிவுச்சட்டத்தில் இசுலாமியர்களின் உரிமை
13. கடந்த 24.11.2009 அன்று அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் திருமணங்கள் பதிவு சட்டம் (தா.நா.சட்டம் 29.2009) இசுலாமியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியமாக மகல்லா ஜமாத்; மற்றும் அரசு தலைமை காஜி ஆகியோரிடம் இசுலாமியர்கள் திருமணங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசின் திருமணங்களுக்கான பதிவுச்சட்டம், முசுலிம்களின் இந்த தனிச ;சட்ட உரிமையை பாதிக்காத வகையில் அமைந்திட வேண்டுமென மாநாடு கேட்டுக்கொள்கிறது.

அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பெண்கள்
14. அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உள் இட ஒதுக்கீடு கல்வித்துறைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை வேலை வாய்ப்புத ;தளத்திலும் நீட்டிக்க வேண்டும் என்றும், இந்த உள் இட ஒதுக்கீட்டில் அருந்ததிய பெண்களுக்கு 50 சதவிகிதம் வழங்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தமிழீழ அகதிகள் மற்றும் இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் நலன்
15. தமிழகத்தில் உள்ள தமிழீழ அகதிகளுக்கு சர்வதேச அகதிகளுக்கான சட்டப்படி மறுவாழ்வு வழங்குவதுடன், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுதி செய்ய வேண்டுமென இம்மாநாடு தமிழக அரசை கோருகிறது.

ஈழப்போராளிகள் விடுதலை
16. ஈழத்தில் புலிகள் என்னும் சந்தேகத்தின்பேரில் சிறைவைக்கப்பட்டு கொடுமைக்குள்ளாகி, மனித உரிமைகளையும் மாண்புகளையும் முற்றாக இழந்துள்ள 12,500 ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து, அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருகிறது.

சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்படும் தமிழக மீனவ குடும்பங்களுக்கு உதவி
17. இந்திய கடல் எல்லையில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு மாத உதவித்தொகை வழங்கும்படியும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பினை வழங்குபடியும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

கலைஞர் வீட்டுவசதி திட்ட வீடுகளின் கட்டுமான அளவு
18. தமிழக அரசு செயல்படுத்தவுள்ள 21 லட்சம் வீடுகள் கட்டும கலைஞர் வீட்டுவசதி திட்டத்தை இந்த மாநாடு மகிழ்வுடன் வரவேற்கிறது. அதே நேரத்தில் அரசு கட்டித்தரவுள்ள ஒவ்வொரு வீடும் குறைந்த அளவு 300 சதுர அடியில் அமைத்திட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தமிழகத்தில் பெண் உரிமைக்காக போராடிய பெண் போராளிகளுக்கு மணிமண்டபம்

19. தமிழகத்தில் பெண் உரிமைக்காகவும், சமூகத்தின் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்ட பெண் போராளிகளின் நினைவைப்போற்றும் வகையிலும் அவர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைகளுக்கு நினைவுபடுத்தவும் ஒரு மணி மண்டபம் சென்னையில் அமைக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

ஊடக வன்முறைக்கு கண்டனம்
20. செய்தி ஊடகங்களில் பெண்கள் தொடர்ந்து தவறாக சித்தரிக்கப்படுவதுடன், அவர்களது தனிப்பட்ட விவகாரங்களில் அத்துமீறி நுழைகின்றன. இது பண்பாட்டு சீரழிவை உருவாக்கி சமூகத்தில் மோசமான விளைவுகளை உருவாக்குகிறது. ஊடகங்களின் இந்தபொறுப்பற்ற செயல்மிகுந்த கண்டனத்துக்கு உரியது என்பதை இம்மாநாடு பதிவு செய்கிறது.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர்கள் துரை ரவிக்குமார், கலைக்கோட்டுதயம், கருத்தியல் பரப்பு செயலாளர் கவுதம சன்னா, திமுக விலிருந்து மாலை ராஜா, துணைப்போதுச்செயலாளர்கள் உஞ்சை அரசன், கனியமுதன், அமைப்பு செயலாளர்கள் ஆற்றலரசு, பூவை வல்லரசு, தலைமைநிலையச் செயலாளர்கள் வன்னியரசு, ஏ.சி.பாவரசு, தனிச்செயலாளர்கள் பாவலன், இளஞ்சேகுவேரா, மாநில செய்தி தொடர்பாளர் ஆர்வலன், வழக்குரைஞர் அணி மாநிலச் செயலாளர் எழில் கரோலின், ஊடக மைய மாநிலச் செயலாளர் அறிவமுதன், வெளியீட்டு மைய மாநிலச் செயலாளர் ஆதிரை நெல்லை மாவட்டச் செயலாளர் செல்லையா பாண்டியன், காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன்  உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். பேராசிரியர் அரங்க மல்லிகா, பத்மாவதி ஆகியோர் கருத்தரங்கத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர். 
காஞ்சி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட துணை செயலாளர் இந்திரா நாராயணன் தலைமையில் ஏராளமான பெண்கள் விடுதலைச்சிறுத்தைகள் கலந்துகொண்டனர்!
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...