Sporty Magazine official website | Members area : Register | Sign in

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதா? தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதா? தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்.

டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர் கருகியதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், விவசாயிகள் எவரும் பயிர் கருகியதால் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனக் கூறியுள்ளனர்.  இது ஏற்கனவே மனம் நொந்து தவிக்கும் டெல்டா மாவட்டத்து விவசாயிகளுக்குப் பேரிடியாக அமைந்திருக்கிறது.  உண்மைக்கு மாறான தகவலை நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர்கள் அளித்திருப்பது தமிழக அரசுக்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாது.  அவர்களது கூற்றுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். 
குறுவை சாகுபடி இல்லாத நிலையில், சம்பா பயிரும் கருகிப்போன சூழலில் வேறு எந்த வழியுமற்ற விவசாயிகள் தற்கொலை என்கிற துயரமான முடிவை நாடியுள்ளனர். இதுவரை 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் அவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.  தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினர் துயரத்தில் பரிதவிக்கின்றனர்.  அவர்களுக்கு ஆறுதல் சொல்லித் தேற்ற வேண்டிய அரசு இப்படி ஒரு நிலையை எடுத்திருப்பது கண்டனத்துக்குரியதாகும்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் எவரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்ற மாவட்ட ஆட்சியர்களின் நிலைப்பாடு, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்திடம் இழப்பீடு கேட்டு தமிழக அரசு தொடுத்துள்ள வழக்குக்குப் பாதகமாக அமையும்.  காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் அது பலவீனப்படுத்தும்.  ஒரே பிரச்சனையில் உயர்நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாடும், உச்ச நீதிமன்றத்தில் அதற்கு நேர் எதிரான நிலைப்பாடும் மேற்கொள்வது இயலாத ஒன்றாகும். 
இவற்றையெல்லாம் ஆராய்ந்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய வேண்டுமென்றும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்கிட முன்வரவேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவண்
தொல்.திருமாவளவன்
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...