Sporty Magazine official website | Members area : Register | Sign in

இனவெறியன் இராஜபக்சே புதுதில்லி வருகையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
இனவெறியன் இராஜபக்சே புதுதில்லி
வருகையைக் கண்டித்து
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
எழுச்சித்தமிழர் அறிவிப்பு!


சிங்கள இனவெறியன் மகிந்த இராஜபக்சே எதிர்வரும் 08-06-2010 அன்று இந்திய ஆட்சியாளர்களைச் சந்திப்பதற்காக புதுதில்லி வருவதாகத் தெரிகிறது. முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களைப் பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்த மனிதநேயமில்லாத காட்டுமிராண்டி இராஜபக்சே, அந்தப் பேரவலம் நடந்து முடிந்து ஓராண்டு ஆன நிலையிலும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவோ அச்சிக்கலுக்கான அரசியல் தீர்வை உருவாக்கவோ சிறிதும் முனைப்புக் காட்டவில்லை.

கடந்த சனவரி மாதத்திற்குள்ளாக வவுனியாவில் உள்ள வதைமுகாம்களிளுள்ள அனைவரையும் விடுவித்து அவரவருக்கான சொந்த வாழிடங்களில் மீள்குடியமர்த்தம் செய்யப் போவதாகவும் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை நிறைவேற்றப் போவதாகவும் இந்திய அரசுக்கு வாக்குறுதி அளித்த இராஜபக்சே அவற்றை நிறைவேற்றுவதற்கு எள்முனையளவும் அக்கறை காட்டவில்லை. இன்னும் இலட்சக்கணக்கானோர் வவுனியா வதைமுகாம்களில் சிக்கிச் சீரழிந்து வருகின்றனர். அம்முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகள் ஏதும் செய்யப்படாத நிலையில் அனாதைகளாய் அல்லாடி வருகின்றனர்.


இத்தகைய நிலையில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அடைக்கலம் தேடித் தப்பித்துச் சென்ற தமிழர்களையும் கடல் பகுதிகளில் சுற்றி வளைத்துத் தாக்குகின்ற கொடுமைகளையும் சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. இந்தியாவுக்கோ அல்லது சர்வதேசச் சமூகத்திற்கோ அச்சப்படாமல், மனிதநேய மரபுகளையும் மதிக்காமல் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொள்கிற ஈவிரக்கமில்லாத இனவெறியன் இராஜபக்சேவின் இந்திய வருகை மேலும் ஒரு ஏமாற்று நடவடிக்கையாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.


எனவே இராஜபக்சேவின் வருகையை எதிர்க்கும் வகையிலும் சிங்கள அரசின் மனிதநேயமற்ற போக்குகளைக் கண்டிக்கும் வகையிலும் 8-6-2010 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் சென்னையில் எனது தலைமையில் நடைபெறுகிறது. அந்த அறப்போராட்டத்தில் மனிதநேயமுள்ள ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.


இவண்
(தொல். திருமாவளவன்)
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...