விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விருதுகள் வழங்கும் விழா, மறைமலைநகரில் நடக்க உள்ளது. இதற்காக, பந்தல் போடும் பணி நடக்கிறது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 05.04.2010 அன்று தொடங்கி வைத்தார்.
அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் கருணாநிதியை பாராட்டி, அம்பேத்கர் சுடர் விருதும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெரியார் ஒளி விருதும், சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு காமராஜர் கதிர் விருதும், கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு காயிதேமில்லத் பிறை விருதும், முனைவர் அலாய் ஷியாசுக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருதும், மறைந்த தேவநேய பாவாணருக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்படுகிறது. விருதுகளுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும், பாராட்டு கேடயமும் வழங்கப்படும்.
விழாவையொட்டி அரண்மனை போன்ற பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. 25 ஆயிரம் பேர் அமரும் வகையிலும், 50 ஆயிரம் பேர் நின்று பார்க்கும் வகையிலும் இது இருக்கும். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
மாவட்ட செயலாளர் விடுதலை செழியன், மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் த.பார்வேந்தன், மாநில மாணவர் அணி துணை செயலாளர் லு.அருள் , மாவட்ட துணை செயலாளர்கள் அம்பேத்கர் வளவன், தென்னவன், செய்தி தொடர்பாளர் எழிலரசு, கொத்தடிமை மீட்பு இயக்க தலைவர் கலைவடிவன், மாநில இளைஞரணி செயலாளர் வெற்றிச் செல்வன், தலைமை நிலைய செயலாளர்கள் பாவரசு, வன்னியரசு, இளஞ்சேகுவாரா, நகர நிர்வாகிகள் கோவேந்தன், மாறன், முத்தையா, அமுல்ராஜ், பருத்திகுளம் மதி.ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.