நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலின்படி கடமையாற்றும் அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் ரமலான் வாழ்த்துகள்! எழுச்சிதமிழர் வாழ்த்து !
இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் கடந்த ஒரு மாத காலமாக நோன்பிருந்து நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலின்படி தமது வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஏழை எளிய மக்கள், தம் வாழ்வின் பெரும் பகுதி நாட்களில் வறுமை காரணமாக பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அத்தகைய பட்டினியின் கொடுமையை வசதி படைத்தவர்கள் உணர வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இந்நிலையில் வறுமையை, பட்டினியை மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும் என்னும் அடிப்படையிலும், பசித்தாலும் உண்பதில்லை, வேட்கையிலும் நீர் அருந்துவதில்லை என்னும் கட்டுப்பாட்டை வளர்ப்பதற்குரிய பயிற்சி முறை என்னும் அடிப்படையிலும், நபிகள் நாயகம் வகுத்தளித்த வாழ்க்கை நெறிமுறைகளுள் ஒன்றாக ரமலான் நோன்பு இஸ்லாமியச் சமூகத்தால் பின்பற்றப்பட்டு வருகிறது.
மேலும், ஏழை எளியோர்க்கு உதவுவது, உணவைப் பகிர்ந்துகொள்வது போன்ற உயரிய அறப் பண்புகளை வளர்த்துக்கொள்வதற்கும், இத்தகைய நோன்பு வழிகாட்டுகிறது. இறையச்சம் கொண்டோராய் மனிதர்கள் தங்களைப் பண்படுத்திக் கொள்ளவும் நபிகள் நாயகம் இத்தகைய பண்பாட்டு நெறிமுறைகளை இஸ்லாமியச் சமூகத்துக்கு அருட்கொடையாக வழங்கியுள்ளார். நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலின்படி ரமலான் நோன்பிருந்து, வறுமையை உணர்ந்து, ஏழை எளியோரை நேசித்து, இறையச்சத்துடன் வாழ்ந்து கடமையாற்றும் அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் எமது நெஞ்சார்ந்த ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்..
இவண்
(தொல். திருமாவளவன்)

