காஞ்சிபுரத்தை அடுத்துள்ள கீழ்கதிர்பூர் கூட்ரோடில் கடந்த 23ம் தேதி இரவு அப்பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்த ராவணன் தலைமையில் , அம்பேத்கர் முழு உருவ சிலையை அமைத்தனர். அனுமதியின்றி சிலைவைக்கப்பட்டதென்று, அதை அகற்றும்படி போலீசார் கூறினர். சிலையை அகற்ற விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., பழனி, போலீஸ் டி.எஸ்.பி., ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடந்தது. "அரசு உத்தரவின்படி அனுமதியின்றி எங்கும் சிலை வைக்கக் கூடாது. மேலும் அரசு அனுமதி பெற்று சிலை வைப்பதாக இருந்தாலும் வெண்கல சிலைதான் வைக்க வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் சிமென்ட் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சிலையை அகற்ற வேண்டும். நீங்கள் அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம்' என்றனர்.
அப்பகுதி மக்கள் சிலையை அகற்றுவதாகக் கூறி வெளியே வந்தனர். அதன்பின் இரவு ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் சிலையை அகற்ற சென்றனர். அப்போது காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமையில் திரளான விடுதலைச் சிறுத்தைகள் இது பற்றி காவல் துறையினரிடம் முறையிட்டு சிலையை மூடிவைத்து அனுமதி கிடைத்த பின்னர் திறக்கிறோம் என்றனர். அதற்கு போலீசார் சம்மதித்தனர். அனைவரும் இரவு முழுவதும் சிலை அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதற்க்கடுத்ததாக திங்கட்கிழமை சிலை வைப்பதற்கு அனுமதி வழங்க காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமையில் காஞ்சி மாவட்ட துணை செயலாளர் ஆ.அம்பேத்கர்வலவன் , லூ.அருள், நா.டேவிட், திருமாதாசன், மதி.ஆதவன், தம்பிதுரை, ஸ்டாலின், மற்றும் திரளான விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவை வழங்கினர்.